Tuesday 15 November 2016

Archaeological Dept & HRCE - uncaringly destroy old inscriptions of glorious Chola heritage

Common not knowing the significance of historical places is understandable ~ every place you visit, you can see some persons writing ‘their address, place, qualification, their love and more ‘ – they spoil the pristine glory of the place and should be condemned…. – and , what would you say, if historic evidence is destroyed by mindless act (calling it renovation) by Archaeological Dept, – who are expected to protect  and HRCE (Hindu Religious and Charitable endowments Dept) who control the finances derived by temples !!!!  Sad is the state of affairs


****************
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி எனும் தலம் காவிரி மற்றும் பழவாறு ஆகிய நதிகளின் வடபுறம் அமைந்துள்ள கிராமம்.  ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் சீரோங்கும் பொழிற்கோடைத் திருலோக்கிய சுந்தரனேஎன அழைத்து பதினொரு  பாடல்களில் திரைலோக்கி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனைப் போற்றிப் பரவியுள்ளார். திரைலோக்கி என்றும் திரைலோக்கிய  மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், திரைலோக்கி என்னும் விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்றும் சோழப் பேரரசர்கள் காலத்தில்  அழைக்கப் பெற்ற இவ்வூர், தற்காலத்தில் திருலோக்கி என வழங்குகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும்  சாலையில் உள்ள இவ்வூரில் கயிலாசநாதர் திருக்கோயில் என்றும்  சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்பெறுகின்ற இரு சிவாலயங்கள்  உள்ளன.

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கியவர்கள்  சோழர்கள்.  நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'.  சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.    இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.  சோழர்ச தம் மலர் ஆத்தி.   மாமன்னன் இராசராசனிற்கு  பிறகு  இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன்.   ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இராசேந்திர சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான்.  சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்த வெற்றியைச் சிறப்பிக்க கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காகஇராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

நிற்க.  இது சரித்திர பதிவல்ல !  அற  நிலத்துறையும் தொல்லியல்துறையும் சேர்ந்து  ~ பணி சிறப்பு உணராமல் ஒரு அற்புத சரித்திர சான்றை தகர்த்த செய்தி.  [கீழே தினமலர் இன்றைய செய்தி 15.11.2016 அப்படியே மறுபதிவு]

முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, ஒரே தமிழ் மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கைநீரை சுமந்து வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலைய துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். இது, வரலாற்று ஆர்வலர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அங்கு கள ஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் கோமகன் கூறியதாவது: சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை நீரை கொண்டு வந்து, இக்கோவில் இறைவனை வணங்கிய பின், கங்கைகொண்ட சோழபுரம் சென்றான். இது, அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு முக்கிய வரலாற்று சான்று; அது சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுளம்ப நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரிஷபானந்தர் மற்றும் ரதிமன்மதன் சிலைகளை, வெற்றி சின்னங்களாக இக்கோவிலுக்கு வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது. அவையும், தற்போது வண்ணம் அடித்து, சிதைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பழமையான கல்வெட்டுகள், புராதன சின்னங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அவை, கடந்த கால ஆவணங்கள். அவற்றை அழகுபடுத்துவதாக எண்ணி, வண்ணம் பூசுவதால், அவற்றின் மதிப்பு குறைவதோடு, எழுத்துக்களை படிக்க முடியாமலும் போய்விடும். திருலோக்கி கைலாசநாதர் கோவில், அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், திருப்பனந்தாள் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மடம், இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை.இவ்வாறு நடைபெறாமல் இருக்கவே, தமிழக தொல்லியல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பயிற்சி அளிக்கிறது. ஆனாலும், வரலாறுகள் அழிக்கப்படுவது வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர்.