Wednesday 1 April 2015

Appreciations to Mr Sarathkumar & Samathuva Makkal Katchi for condemning Dravida Kazhagam

திராவிட கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டம்
பெண்களை புண்படுத்தும் செயல்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் .


Appreciations to Mr Sarathkumar & Samathuva Makkal Katchi for condemning the barbaric activities of Dravida Kazhagam


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திராவிடர் கழகம் சார்பில் கடந்த வாரம் இயற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்றாக, வரும் ஏப்ரல் 14–ம் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று விபரீதமான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து ஊடகங்களிலும், இவை குறித்த தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

பகுத்தறிவு என்ற பெயரில் இவர்கள் பரப்பிவரும் தகவல்கள், நடத்திவரும் நாடகங்கள் நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காக மட்டுமே தவிர, அவை வெறும் கேலிக்கூத்துகள் தான் என்றே மக்கள் மனதில் சித்தரிக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருக்கிறார்கள், தமிழகத்தில் அத்தகைய தடை விதிக்கப்படவில்லை. எனவே அதை கண்டித்து தமிழகத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்துவது இவர்கள் மாட்டுக்கறி உண்பதற்கும், விளம்பரத்திற்கும் ஒரு காரணமே தவிர வேறில்லை. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கறி விருந்து நடத்தலாமே! இந்தியா முழுவதும் மான் கறிக்கு கூடத்தான் தடை இருக்கிறது. இவர்கள் மான்கறி விருந்து சாப்பிட முன்வரலாமே!

இது ஒருபுறமிருக்க, திருமணத்தின் போது பெண்கள் அணியும் தாலி பற்றிய சர்ச்சையை உருவாக்கி, “தாலி அகற்றும் நிகழ்ச்சி” என்று மற்றொரு வேதனையான நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்ய இருக்கிறார்கள்.  உலகெங்கிலும் திருமண நிகழ்வுகளின் போது மணமக்களுக்கு திருமண நினைவுச்சின்னம் அணிவிக்கப்பட்டு வருவது மரபு. கிருஸ்தவர்களுக்கு மோதிரம், தாலி, இஸ்லாமியருக்கு கருகமணி, இந்துக்களுக்கு தாலி என்பன போன்ற சின்னங்கள் பெண்களுக்கு அணிவிக்கப்பட்டு வருகின்றன. தாலியோ, கருகமணியோ, மோதிரமோ ஒரு அடையாளம் தானே தவிர, ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக ஆண்கள் உபயோகப்படுத்தும் அஸ்திரம் என்பது வேண்டுமென்றே பரப்பப்படும் பசப்புரைகள்.

எனவே, தாலிக்கு எதிராக திராவிடர் கழகம் சொல்லிவரும் கருத்துக்களும், மேற்கொண்டுவரும் நிகழ்வுகளும் காலம் காலமாக மதித்துவரும் தமிழக பெண்களின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் களங்கம் கற்பிப்பதாகும். எனவே, தாலியறுக்கும் நிகழ்ச்சி என்பது இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, கிருஸ்தவ, இஸ்லாமிய இனத்தவர்க்கும் எதிரானதும் கூட என்றே கருதலாம். இத்தகைய நிகழ்வுக்கு இந்து மதம் சார்ந்த பெண்கள் அல்லாது இஸ்லாமிய, கிருஸ்தவ பெண்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது உறுதி.

சங்க இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்புகள் இல்லை. எனவே, தாலி என்பது தமிழர் கலாச்சாரம் சார்ந்தது இல்லை என்ற வாதம் ஏற்புடையது அல்ல. சங்க இலக்கியங்களில் பகுத்தறிவு என்னும் கடவுள் எதிர்ப்பு என்பதும் கூட இல்லைதான். நீங்கள் கடவுள் எதிர்ப்பு என்பதை வைத்து அமைப்பு நடத்தவில்லையா? சங்கஇலக்கியத்தில் கம்ப்யூட்டர் கிடையாது, கார் கிடையாது, விமானம் கிடையாது என்பதற்காக அவற்றையெல்லாம் தற்போது உபயோகப்படுத்தாமல் இருக்கச்சொல்கிறீர்களா?

தாலி கட்டுவதும், அதை புனிதமாக கருதுவதும் காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, தாலியை பற்றி அவதூறு பரப்புவது தமிழினத் தாய்க்குலத்தை திராவிடர் கழகம் இழிவுபடுத்தும் செயல் என்ற வகையில் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு ”தாலிக்குத் தங்கம்” என்று ஏழைப்பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. இத்திட்டம் தவறு, கூடாது என்று திராவிடர் கழகம் போராடத்தயாரா?

வாழ்க்கை முறையில் பல்வேறு சம்பிரதாயங்கள் பிரிக்க முடியாத சடங்குகளாக மாறிவிடுவது உண்மை. அந்த வகையில் தாலியும் அது சார்ந்த புனிதமும், நம்பிக்கையும் தமிழர் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒன்றுதான்.  அதை கேலி பொருளாக்கி திராவிடர் கழகம் தமிழக தாய்மார்களின் மனங்களை, தமிழர்களின் இதயங்களை புண்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் தாய்க்குலத்தை ஒன்று திரட்டி திராவிடர் கழகத்திற்கெதிரான போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு தேவையான பயனுள்ள போராட்டங்களில் திராவிடர் கழகத்தின் தலைவரும், அனுபவமிக்க தலைவருமான கி.வீரமணி தனது கவனத்தையும் முயற்சிகளையும் திசை திருப்பிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2015/03/31140114/Active-hurtful-women-Sarath-Ku.html

No comments:

Post a Comment